ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பலைகள் பரவலாக இருந்து வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த திரைப்பட விழாவில் நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவு குறித்து கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக பெரியார் சொன்னதை மேற்கொள்காட்டி அவர் பேசினார். அவர் பேசும்போது, “ காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. அண்டை வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மிகுந்த மன வருத்தம் தருகிறது” எனக் கூறியுள்ளார்.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதி பின்புலத்தை சரியான புரிந்து கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் தேசிய நாட்டுப்புறக்கலை விழா தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் இந்த விவகாரத்தில் ஆழ்ந்து யோசித்து பேச வேண்டும் என்றார்.