தனது கல்லீரலில் 75 சதவீதம் பாதிப்படைந்துவிட்டதாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்
பாலிவுட் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக்கொண்டு இருப்பவர் அமிதாப்பச்சன். இந்தி உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் இவர் 1969ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு காசநோய் விழிப்புணர்வு குறித்து அமிதாப்பச்சன் பேசினார். அதில், தனது கல்லீரலில் 75 சதவீதம் பாதிப்படைந்துவிட்டதாக தெரிவித்த அவர், மீதமுள்ள 25 சதவீதத்தில்தான் தான் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அமிதாப்பச்சன், ''நான் காசநோயில் இருந்து மீண்டவன். உடல் பரிசோதனை விழிப்புணர்வுக்காக என்னுடைய தனிப்பட்ட கதையையே கூறுகிறேன். தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் என்னுடைய கல்லீரல் 75 சதவீதம் கெட்டுபோய்விட்டது. இந்த விஷயம் எனக்கு 20 வருடங்கள் கழித்தே தெரியும்.
தற்போது நான் மீதமுள்ள 25 சதவீதத்தில்தான் தான் வாழ்ந்து வருகிறேன். எல்லா நோயுக்கும் சிகிச்சை உள்ளது. ஆனால் உடல் பரிசோதனை செய்துகொண்டால் மட்டுமே நோய் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். உரிய சிகிச்சை எடுக்க முடியும். அனைவருமே உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எனக்கு நடந்தது போன்று யாருக்கும் நடக்கலாம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.