நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால் ,ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஜான் சார்லஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் கதை எழுதி, கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறியாதாக குறிப்பிட்டிருந்தார். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக அவர் கூறியதாகவும்,
இந்த நிலையில், சரவெடி கதையை காப்பான் என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார் என்றும், அதனால் காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சரவெடி படத்தின் கதை வேறு,காப்பான் கதை வேறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் மனுதாரரை எந்த காலத்திலும் தான் சந்தித்தது இல்லை என்றும் அடையாளம் தெரியாதவர்களிடம் கதை கேட்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தார்