‘மாமனிதன்’ படத்தில் தந்தை இளையராஜா உடன் பணியாற்றுவது குறித்து யுவன் சங்கர் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘மாமனிதன்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதி - சீனுராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ‘மாமனிதன்’ படத்தில் தனது தந்தை இளையராஜாவுடன் பணியாற்றுவது குறித்து யுவன் சங்கர் ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “முதன் முறையாக நானும் எனது தந்தையும் இணைந்து பணியாற்றுகிறோம். இப்படத்தின் பாடல்கள் நிச்சயம் அனைத்து இசை பிரியர்களை ஆச்சர்யப்படுத்தும்” என்று யுவன் குறிப்பிட்டுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படங்களில் மட்டும் இளையராஜா அவ்வவ்போது பாடல்களை பாடி வந்தார். ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘மேகா’ உள்ளிட்ட இளையராஜா இசையமைத்த படங்களில் யுவன் பாடினார். தற்போது, இளையராஜவும், யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக ஒரு படத்திற்கு இணைந்து இசையமைக்கிறார்கள்.