இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அஸ்வினி ஐயர் திவாரி கூறியுள்ளார்.
பாலிவுட் இயக்குநர் அஸ்வினி ஐயர் திரிவேதி. இவர் ‘நில் பேட்டி சன்னடா’ என்ற படத்தை 2016 ஆண்டு இயக்கி இருந்தார். ஒரு ஏழைத் தாய்க்கும் அவரது மகளுக்கு நடக்கும் பாசப் போராட்டமாக இந்தப் படம் அமைந்திருந்தது. இந்தப் படத்தின் சமூக கருத்தை கண்ட தனுஷ், இதனை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, ‘அம்மா கணக்கு’ என உரிமை பெற்று வெளியிட்டார். அதில் அமலா பால் ஒரு ஏழைத்தாயாக வாழ்ந்திருந்தார். அந்தப் படம் ஒரு சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அஸ்வினி ஐயர் திவாரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்தப் படம் வெறும் ஒரு படமல்ல; இது ஒரு வாழ்க்கை என்று கூறியுள்ளார்.
மேலும் அஸ்வினி ஐயர் திவாரி, இன்ஸ்டாவில் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் “இரண்டு எதிர் எதிர் ஆளுமைகள். என்னிடம் நாராயண மூர்த்தி உடனான புகைப்படம் இல்லை. ஆனால் அவரது மனைவி சுதா அம்மாவுடன் பல மணிநேரம் செலவழித்துள்ளேன். இவர்களுடன் 21 வருடங்கள் வேலை செய்திருக்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், “நாராயணமூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி போன்ற ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். இவர்களுடைய ஆத்மார்த்தமான வாழ்வு எனக்கு மிகப் பெரிய உத்வேகம். மூர்த்தியின் படத்தை இயக்குவதால் நான் நிறைவாக உள்ளேன். இவர்களின் ‘முன்னுதாரணமான’ வாழ்வை என் மீது நம்பிக்கை வைத்து அளித்துள்ளனர். இது படமல்ல; இது வாழ்க்கை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.