ரஜினியுடன் நடிப்பது எந்த நடிகர், நடிகைகளுக்கும் செளகர்யமான விஷயமாக இருக்கும் என்று அறிமுக நடிகை ஷமடா கூறியுள்ளார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து ரஜினிகாந்த் 5 நாள்கள் ஆன்மிக பயணமாக கடந்த 13 ஆம் தேதி இமயமலை சென்றார். .
இந்நிலையில், ‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் நடித்திருப்பதை பற்றி நிவேதிதா தாமஸ் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார். அவர் இந்தப் படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருப்பதாகவும் அதில் கூறியிருந்தார். இவரைப்போல இப்போது ஷமடா ‘தர்பார்’ படத்தில் நடித்திருப்பதை பற்றியும் இந்த வாய்ப்பு எப்படி என்பது பற்றியும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “படத்தை பற்றி எல்லா விஷயங்களையும் நான் சொல்ல முடியாது. எனக்கு அந்தச் சுதந்தரம் இல்லை. என்னுடைய உடையலங்கார வடிவமைப்பாளர் மூலம்தான் இந்த வாய்ப்பு வந்தது. அவர்தான் இயக்குநர் முருகதாஸை அறிமுகப்படுத்தினார்.
அவர் ஏற்கெனவே என் கதாபாத்திரத்தை எழுத்துப்பூர்வமாக எழுதி முடித்திருந்தார். அதற்கு நான் சரியாக இருப்பேன் என்று அவர் நம்பினார். அவர் என் நடிப்பை முன்பே பார்த்திருந்தார். அதனால் கதையை சொன்னார். நான் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றவர் “இந்தத் ‘தர்பார்’ படத்தில் அதிகபடியான காட்சிகளில் நான் ரஜினிகாந்த் கூடவேதான் வருவேன். அந்த மாதிரியான காட்சிகள்தான் அதிகம். முதல் நாள் ஷுட்டிங் போது நான் பதட்டமாக இருந்தேன். ஆனால் அவர் மிக எளிமையாக இருந்தார். மிக இனிமையான மனிதர். யாராக இருந்தாலும் அவர் உடன் நடிப்பதை செளகர்யமாக நினைப்பார்கள்” என்று கூறியுள்ளார்.