இந்திய சினிமா நடிகர்கள் கலந்து கொண்ட சினிமா ரவுண்ட்டேபிள் பேட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா, ஆலியா பாட், பார்வதி மற்றும் விஜய் சேதுபதி கலந்துகொண்டனர். தங்களுக்குள்ளான சினிமா புரிதல் குறித்தும் சினிமாவின் தற்போதைய நிலை குறித்தும் கருத்துகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இதில் பேசிய மலையாள நடிகை பார்வதி, திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களிடம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அந்த கதாபாத்திரங்கள் எப்படி இயல்பாக கொண்டு சேர்க்கப்படுகின்றன என்பது குறித்து பேசினார். குறிப்பாக அர்ஜூன் ரெட்டி மற்றும் ஆங்கில திரைப்படம் ஜோக்கர் படத்தை முன்னெடுத்து பேசினார். அதில் அர்ஜூன் ரெட்டியை வறுத்தெடுத்தார். சினிமாக்கள் பெண் வெறுப்பை கொண்டாடுவதற்கும், அதனை பிரதிபலிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசம் குறித்து பேசினார். அதில், '' சமூகத்தில் உள்ள பெண் வெறுப்பை சினிமாக்கள் கொண்டாடுவதற்கும், பிரதிபலிப்பிற்கும் இடையே மெல்லிய கோடுதான் இருக்கிறது.
பெண் வெறுப்புள்ள ஒரு ஆண், சினிமாவில் பெண்ணிடம் அத்துமீறுகிறார் என்றால் அது பார்வையாளர்களிடம் கைத்தட்டல் வாங்குகிறது என்றால் அங்கு பெண் வெறுப்பு கொண்டாடப்படுகிறது என்பதாகும். சினிமா என்பது வசனங்கள் கொண்டவையாக இருக்க வேண்டும். ஆனால், அவை பார்வையாளர்களுக்கு இதுதான் சரி என்ற ஒரு விஷயத்தை உட்புகுத்திவிடுகிறது.
அதனை எழுதிய எழுத்தாளர், இயக்குநர் ஆகியோர் பெண் வெறுப்பை கொண்டாடுகிறார்கள் என்று பொருள். அதேவேளையில் அதேப்போன்ற ஒரு பெண் வெறுப்பு காட்சி கைத்தட்டலை வாங்காமல், இது சரியா தவறா என்ற கேள்வியை பார்வையாளனிடம் எழுப்பினால் அது சரியான சினிமாவாகவும், பெண் வெறுப்பை பிரதிபலிக்கும் சினிமாவாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஆங்கிலப்படமான ஜோக்கர் திரைப்படத்தில் நடிகர் பல கொலைகளை செய்தாலும் அந்த கதாபாத்திரத்தை பின் தொடர வேண்டுமென்றோ, பாராட்ட வேண்டுமென்றோ தோன்றவில்லை. அதேவேளையில் அர்ஜூன் ரெட்டியில் காதலர்களிடையே கன்னத்தில் அறைந்துகொள்வதை காட்டுகிறார்கள். அதற்கு யூ டியூப்பில் சென்று பார்த்தால் மக்கள் கும்பல் மனப்பான்மையில் ஆதரவாக கமெண்ட் செய்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் வன்முறையை தூண்டுகிறீர்கள் என்று தெரிவித்தார்.
பார்வதியின் இந்த தைரியமான பேச்சு இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. இணையவாசிகள் பலரும் பார்வதிக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். போலியாக புகழ்வதை விடவும், மனதில் உள்ளதை தைரியமாக பேசும் பார்வதி இந்திய சினிமாவில் முக்கியமானவர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் அது இந்தியிலும், தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த சினிமா ரவுண்ட்டேபிள் பேட்டியில் அர்ஜூன் ரெட்டி நடிகர் விஜய் தேவரகொண்டாவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.