பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில், நடிகர் பாக்யராஜூக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பாலியல் பிரச்னைக்கு பெண்கள்தான் மூலக்காரணம். ஆண்கள் தவறான பழக்கம் இருந்தாலும் வீட்டை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் வேறு ஆண்களுடன் செல்லும் பெண்கள், குழந்தைகளையும் கணவர்களையும் கொலை செய்ய துணிகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு பெண்களும்தான் காரணம். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது அதனால்தான் பெண்களை கட்டுப்பாடுடன் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு சுயக்கட்டுப்பாடு வேண்டும் என முன்னோர்கள் தெரிவித்திருக்கின்றனர்” என பேசி இருந்தார். இவரது இந்தப் பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து, நடிகர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆந்திர மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியது. இந்நிலையில், தாமாக முன்வந்து புகார் பதிவு செய்துள்ள தமிழ்நாடு மகளிர் ஆணையம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ்-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் வரும் 2ஆம் தேதி பிற்பகலில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.