தனது தவறை ஏற்றுக்கொண்ட நடிகை பார்வதி, அதை திருத்தி பதிவிட்டதை அடுத்து ரசிகர்கள் அவரை மீண்டும் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய சினிமா நடிகர்கள் கலந்து கொண்ட சினிமா ரவுண்ட் டேபிள் பேட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா, ஆலியா பாட், பார்வதி மற்றும் விஜய் சேதுபதி கலந்துகொண்டனர்.
இதில் பேசிய மலையாள நடிகை பார்வதி, திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களிடம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அந்த கதாபாத்திரங்கள் எப்படி இயல்பாக கொண்டு சேர்க்கப்படுகின்றன என்பது குறித்து பேசினார். குறிப்பாக அர்ஜூன் ரெட்டி மற்றும் ஆங்கில திரைப்படம் ஜோக்கர் படங்கள் பற்றி பேசினார். அப்போது, ’அர்ஜூன் ரெட்டியை வறுத்தெடுத்தார்.
''சமூகத்தில் உள்ள பெண் வெறுப்பை சினிமாக்கள் கொண்டாடுவதற்கும், பிரதிபலிப்பிற்கும் இடையே மெல்லிய கோடுதான் இருக்கிறது. பெண் வெறுப்புள்ள ஒரு ஆண், சினிமாவில் பெண்ணிடம் அத்துமீறும்போது, அது பார்வையாளர்களிடம் கைத்தட்டல் வாங்குகிறது என்றால் அங்கு பெண் வெறுப்பு கொண்டாடப்படுகிறது என்பதாகும்.
சினிமா என்பது வசனங்கள் கொண்டவையாக இருக்க வேண்டும். ஆனால், அவை பார்வையாளர்களுக்கு இதுதான் சரி என்ற ஒரு விஷயத்தை உட்புகுத்திவிடுகிறது. ’அர்ஜூன் ரெட்டி’யில் காதலர்களிடையே கன்னத்தில் அறைந்துகொள்வதை காட்டுகிறார்கள். அதற்கு யூ டியூப்பில் சென்று பார்த்தால் மக்கள் கும்பல் மனப்பான்மையில் ஆதரவாக கமெண்ட் செய்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் வன்முறையை தூண்டுகிறீர்கள்’’ என்று தெரிவித்தார்.
’அர்ஜூன் ரெட்டி’ ஹீரோ விஜய் தேவரகொண்டா முன்னிலையில், பார்வதி இப்படி பேசியது இணையத்தில் ஹிட்டானது. அவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்தன.
அந்தப் பேட்டியில் கும்பல் மனப்பான்மை குறித்து அவர் பேசும்போது, இரட்டை மனநிலை என்பதை குறிக்க, ‘bipolar behaviour’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு பதிலாக, அவர் வேறு வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று திவ்யா கண்டுகுரி என்பவர் சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட பார்வதி, ’ஹாய் திவ்யா, உங்கள் கருத்தை அறிந்தேன். அந்த வார்த்தையை தவறாகப் பயன்படுத்தியதை திருத்திக் கொண்டேன். கடுமையான மனநல குறைபாடுகளை விளக்குவதற்காக, அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். கற்போம், கற்றுக்கொள்வோம், பதிவுசெய்வோம்’’ என்று தெரிவித்தார்.
இது நெட்டிசன்களை மிகுந்த உற்சாகத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. தனது தவறை ஏற்றுக் கொண்ட பார்வதியை, நெட்டிசன்கள் மீண்டும் கொண்டாடி வருகின்றனர்.