கடவுளுக்கு பவர் உள்ளது போன்று ரஜினிக்கும் பவர் இருக்கிறது என இயக்குநர் பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
வேலூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய பாரதிராஜா, ரஜினியின் அரசியல் பற்றி பேச தான் விரும்பவில்லை என்றும் அவருடன் 48 ஆண்டுகால நட்பு உள்ளது எனவும் கூறினார்.
''16 வயதினிலே படத்துக்கு ஐந்தாயிரம் சம்பளம் கேட்டார் ரஜினி. அவ்வளவு தொகை முடியாது இது சிறிய பட்ஜெட் படம்தான் என்றேன். உடனே ரஜினி ரூ.4 ஆயிரம் கேட்டார். இல்லை என்றேன். இறுதியில் அந்தப் படத்திற்காக ரஜினிக்கு ரூ.2500 கொடுத்தேன். இன்னமும் அவருக்கு ரூ.500 பாக்கி இருக்கிறது. இன்றும் ரஜினி, என்னிடம் 'அண்ணே அந்த 500' என்று விளையாட்டாக கேட்பார்.
ரஜினியுடன் எனக்கு இரண்டு முறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சில முறை அவருடன் முரண்பாடு ஏற்பட்டது. அப்போது நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். அப்போதும் ரஜினி என் மீது கோபப்படாமல் இருந்தார். இதுதான் அவரது எளிமை. எல்லாரும் ரஜினியாக பிறக்க முடியாது. கடவுள்களுக்கு உள்ளது போல் ரஜினிக்கும் ஒரு பவர் உள்ளது. அது தான் அனைவரையும் இழுக்கிறது’’ என்று தெரிவித்தார்.