ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 7-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஷன் வகையில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வரும் 7-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்கும் விழாவில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.
அண்மையில் தர்பார் படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலான "நான் தான்டா இனிமேலு" என்ற பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் அனிருத் இரண்டாவது முறை இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.