‘கைதி’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கைதி’. இந்தப் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் அதிக அளவில் வெளியாகின. இந்தப் படத்தை சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பார்த்ததாக தெரிகிறது. ஆகவே அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜை அழைத்து வாழ்த்தியதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது லோகேஷ் நடிகர் விஜயை வைத்து 'தளபதி 64' படத்தை இயக்கி வருகிறார். மேலும் அவர் விரைவில் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.
இந்நிலையில்தான், அவர் ரஜினிகாந்தை சந்தித்து உரையாடி உள்ளார். சமீபகாலமாக ரஜினிகாந்த் இளம் இயக்குநகளை தேர்வு செய்து அவர்களின் படத்தில் நடித்து வருகிறார். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அவர் இந்த முடிவை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆகவே அவர் விரைவில் இயக்குநர் லோகேஷுடன் சேர்ந்து ஒரு படம் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கூட்டணி எப்போது அமையும்? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
'பேட்ட' படத்திற்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள' தர்பார் 'படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். அவரது டப்பிங் பணிகள் கூட சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இப்படம் வரும் 2020 ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வரவுள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக ஆதித்யா அருணாசலம் என்ற வேடத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
நயன்தாரா இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இதற்கு இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் ஓபனிங் சாங் ‘சும்மா கிழி’ வெளியானது. ரஜினி 'தர்பார்' படத்திற்குப் பிறகு, சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.