இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு பாங்காக்கில் தொடங்கி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்தது முதல் திரை ரசிகர்களிடம் ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது. இது இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படம். அந்தக் கனவு நினைவாகி உள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 ஆம் தேதி தாய்லாந்து நாட்டிலுள்ள பாங்காக் நகரில் தொடங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.
அங்கு முதற்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெற உள்ளது. இந்தப் படப்பிடிப்பில் கார்த்தி, 'ஜெயம்' ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் பங்கேற்று நடித்து வருகின்றனர். இதற்குப் பிறகு மற்ற நட்சத்திரங்களும் இணைய உள்ளனர். அதனை அடுத்து முழுவீச்சில் படப்பிடிப்பு அங்கே நடைபெறும்.
மேலும் இதில் விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின் காக்குமனு, கிஷோர் மற்றும் பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ்
தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.