அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி பல்வேறு போட்டிகளின் வெற்றிக்கு உதவியர் கவுதம் கம்பீர். இவர் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு ஓரங்கட்டப்பட்டு விட்டாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். கம்பீர் என்றாலே நினைவுக்கு வருவது உலக கோப்பை இறுதி ஆட்டம்தான். 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 97 ரன்கள் எடுத்து முக்கிய பங்களிப்பை அளித்தார். அதேபோல் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் 75 ரன்கள் எடுத்து அணிக்கு பக்க பலமாக இருந்தார்.
அணியில் இருந்து ஓரங்கப்பட்ட பிறகு அவரை நோக்கி ஓய்வு குறித்த கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டன. ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்திருந்த கம்பீர், ''குறிப்பிட்ட இலக்கு என்பது எதுவும் இல்லை. இந்த நாள் வரைக்கும் எனக்குள் கிரிக்கெட் உணர்வு முழுமையாக பரவி இருக்கிறது. எப்போதும் ஓய்வறையில் சந்தோஷமான சூழலில் இருக்க விரும்புகிறேன். அதைத் தொடர்ந்து செய்கிறேன். தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வமும், ஆக்ரோஷமும் எப்போது குறைகிறதோ? அப்போது விடைபெறுவேன்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார். கவுதம் கம்பீர் 147 ஒருநாள் போட்டிகளில் 5,238 ரன்களும், 58 டெஸ்ட் போட்டிகளில் 4,154 ரன்களும் எடுத்துள்ளார்.