முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ஷிகர் தவானை ஏன் இந்திய உள்ளூர் அணிகளில் சேர்க்கக்கூடாது? என முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணியில் தோனியின் பிரகாசம் முற்றிலும் மங்கிவிட்டது. அவரது ஆட்டத்தை காண்பதும் அறிதாகிவிட்டது. அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் டி20 போட்டி அணியிலும் தோனி ஓரங்கட்டப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தோனி சேர்க்கப்படவில்லை. ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடினார்.
இதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயண போட்டிகளிலும், முடிந்த டி20 தொடரில் தோனி இல்லை. 2019 ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறும் ஒருநாள் போட்டிகள் தொடரில்தான் விளையாடவுள்ளார். இதேபோன்று நாளை மறுநாள் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் ஷிகர் தவானுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மெல்போர்னில் தனது குடும்பத்துடன் நேரத்தை கழித்து வருகிறார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், “தோனி மற்றும் தவான் ஏன் இந்திய உள்ளூர் அணிகளில் விளையாடக்கூடாது? இந்திய அணியில் விளையாடிய வீரர்கள், சர்வதேச போட்டிகளில் விளையாடத நேரங்களில் அவர்களை இந்திய உள்ளூர் அணிகளுக்கு தலைமை வகிக்க செய்யுங்கள் என பிசிசிஐ அணித் தேர்வாளர்களிடம் நான் அறிவுறுத்தியுள்ளேன்.
இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்றால், அணியின் வீரர்கள் சிறந்த ஃபார்மில் விளையாடவேண்டும். அதற்கு அவர்கள் இடையில்லாது தொடர்ந்து விளையாட்டில் பங்குபெற்று வரவேண்டும். தோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை. அதற்கு முன் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை. அவர் கடைசியாக நவம்பர் 1ஆம் தேதி விளையாடினார்.
இதைத்தொடர்ந்து ஜனவரியில் விளையாடவுள்ளார். இது நீண்ட இடைவெளியாகும். இந்தத் தொடரிலும், அடுத்து நடைபெறவுள்ள நியூஸிலாந்து தொடரிலும் தோனி சிறப்பாக விளையாடவில்லை என்றால் அது உலக கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே அணியில் இல்லாத வீரர்களை இந்திய உள்ளூர் அணிகளில் விளையாட வைத்தால், அவர்கள் நல்ல ஃபார்மில் இருப்பார்கள்” என்று கூறினார்.