ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் புஜாரா சதம் அடித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது போட்டி அடிலெய்டில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்குத் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் களமிறங்கினர். ராகுல் வெறும் 2 பந்துகளில் ஹசல்வுட் பந்துவீச்சில் பின்ஞ்சிடம் கேட்க் ஆகி வெளியேறினார். இதையடுத்து முரளி விஜய்யுடன் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் தடுமாறினர்.
11 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய், ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் விராத் கோலி வந்தார். சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றி னார். அவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பின்னர் வந்த துணை கேப்டன் ரஹானேவும் ஹசல்வுட் பந்துவீச்சில் 13 ரன்களில் வெளியேற, இந்திய அணி தடுமாறியது. அடுத்த வந்த ரோகித் சர்மா, மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார். ஆனால், 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லியானின் சுழலில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷாப் வந்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்து கொண்டிருந்தாலும் நிலைத்து நின்ற புஜாரா அரைசதம் அடித்தார்.
ரிஷாப், அவரை அடுத்து வந்த அஸ்வின் ஆகியோர் தலா 25 ரன்களில் ஆட்டமிழக்க, இஷாந்த் சர்மா தன் பங்குக்கு 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
ஒரு பக்கம் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும் புஜாரா அபார சதம் அடித்தார். இதற்காக அவர் 236 பந்துகளை எதிர்கொண்டார். இதில் 2 சிக்சரும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இதையடுத்து அவரும் முகமது ஷமியும் ஆடி வந்தனர். புஜாரா 123 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்திய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஹசல்வுட், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.