’சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் நன்றாக பந்துவீசுபவர். இந்த தொடரில் அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும்’ என்று வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, அடிலெய்டில் நடந்து வருகிறது.
இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 எடுத்தது. புஜாரா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் அதிகப்பட்சமாக 123 ரன்களும் ரோகித் சர்மா 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹசல்வுட் 3 விக்கெட்டையும் ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டையும் இஷாந்த் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, ‘’இந்தப் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. விராத் கோலியின் விக்கெட்டை இழந்தாலும் முன்னேறி இருக்கிறோம். இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான்காவது நாள் (இன்றைய) ஆட்டம் முக்கியமானது.
இதில் நல்ல நிலைக்கு இந்திய அணி வரும் என்று நினைக்கிறேன். புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான வீரர். ஆஃப் ஸ்டம்புக்கு வெளி யே வரும் பந்துகளை எப்படி சந்திக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த ஆட்டத்தை இன்றும் தொடர்வார். அஸ்வின் சிறப்பாக பந்துவீசுபவர். முதல் இன்னிங்ஸில் அவரது பங்கு முக்கியமானது. அவர் அனுபவம் உள்ள வீரர். ஃபீல்டில் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இந்த தொடரில் அவர் முக்கியான வீரராக இருப்பார். அவர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலை கொடுப்பார்’ என்றார்.