நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் மணீஷ் பாண்டேவின் அபார சதத்தால் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது.
நியூசிலாந்து ஏ, இந்திய ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் இப்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி, டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து ஏ அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் வொர்க்கர் 99 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு வீரரான வில் யங் 102 ரன்களும் மிட்செல் 45 ரன்களும் எடுத்தனர். இந்திய ஏ அணி தரப்பில் கலீல் அகமது, நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டையும் அக்ஷர் படேல், சித்தார்த் கவுர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் இந்திய ஏ அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சுப்மான் கில்லும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். இருவரும் தலா 25 ரன்கள் எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மணீஷ் பாண்டேவும் தமிழக வீரர் விஜய் சங்கரும் அதிரடியாக ஆடினர். விஜய் சங்கர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். பாண்டே, அபாரமாக ஆடி சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 49 ஓவரில் இந்திய ஏ அணி, 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மணீஷ் பாண்டே 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.