ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. புஜாரா 123 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன் எடுத்தது. புஜாரா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் எடுத்தனர். ஆஸ்தி ரேலிய தரப்பில் நாதன் லியான் 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணி 323 ரன் முன்னிலை பெற்றிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நான்காம் நாளான நேற்று அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்களுடனும் ஹெட் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின், ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று காலை தொடர்ந்தது. ஹெட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மார்ஷ் விக்கெட்டை, பும்ரா சாய்த்தார். ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்த நிலையில் ஆடி வருகிறது. கேப்ட்ன் டிம் பெய்ன் 40 ரன்களுடன் கம்மின்ஸ் 5 ரன்களுடன் ஆடி வருகின்றனர். காலை, 7.30 மணி நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 137 ரன்களும் இந்திய அணி வெற்றி பெற 4 விக்கெட்டுகளும் தேவை என்பதால் பரபரப்பாக போட்டி நடந்து வருகிறது.
.
அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 100 ஆண்டுகளில் எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததது இல்லை. இந்த சாதனையை ஆஸ்திரேலியா படைக்குமா அல்லது இந்தியா சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுவதால் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது.