ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா விளையாடுவார் எனத் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. புஜாரா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 71 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, பங்கேற்பதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
ஆஸ்திரேலிய போர்டு லெவன் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது அவர் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவரை, முரளி விஜய்-க்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால், பயிற்சி ஆட்டத்தின் போது எல்லைக் கோட்டின் அருகே வந்த பந்தை பிடிக்க முயன்றபோது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
அவரால் நடக்க முடியவில்லை. அவரை ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காயம் அதிக மாக இருப்பதால் அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் குணமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. நேற்று நடந்த பயிற்சியின் போது அவர் கலந்துகொண்டார். அவர் ஜாக்கிங்கும் சென்றார். இதனால் அவர் கணுக்கால் குணமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய்-க்கு பதில் களமிறங்குகிறார். இருந்தாலும் பெர்த்துக்கு சென்ற பிறகே இந்திய அணி இதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் 2 ரன்னும், முரளி விஜய் 11 ரன்னும் எடுத்தனர். 2 வது இன்னிங்ஸில் ராகுல் 44 ரன்னும் முரளி விஜய் 18 ரன்னும் எடுத்தனர்.