ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அட்லாய்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 26 ரன்னில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. கரே 18, பின்ச் 6 ரன்னில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து கவாஜாவும் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் மார்ஷ் நிதானமாக விளையாடி பந்துகளை வீணடிக்காமல் ரன்களைச் சேர்த்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்தது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்குமார் 4 விக்கெட்களையும், முகமது சமி 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வெற்றியை நெருங்கி விளையாடி வருகிறது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா 43 (52), தவான் 32 (28) மற்றும் அம்பத்தி ராயுடு 24 (36) ரன்கள் எடுத்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி சற்று நேரத்திற்கு முன்பு சதம் அடித்தார். இது அவரது 39வது சர்வதேச ஒருநாள் போட்டி சதம் ஆகும். இந்தியா தற்போது 42 பந்துகளுக்கு 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடி வருகிறது. தோனியும் கோலியுடன் விளையாடி வருகிறார்.