போட்டியில் செய்த சில தவறுகளால் தோல்வி நேர்ந்ததாக இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ரோகித் ஷர்மா பேசும் போது, “போட்டி முடியும் நேரத்தில் ஒரு சிறிய ஏமாற்றம். 210 ரன்களை தாண்டிய இலக்கு என்பது மிகவும் கடினமானது. போட்டி முடியும் வரை நாங்கள் சரியான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். ஆனால் நியூஸிலாந்து அவர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை. அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் தான். நாங்கள் ஒருநாள் தொடரை கைப்பற்றினோம். ஆனால் எங்கள் வீரர்கள் இறுதியில் டி20 தொடரை இழந்தது ஏமாற்றம் தான். போட்டியில் சில தவறுகள் நடந்துவிட்டன. ஆனால் முன்னேறிச் செல்வதற்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலியாவை வென்றுவிட்டு தாயகம் திரும்புவது மகிழ்ச்சியானது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த தொடரில் தோற்றது சிறு வருத்தம்” என்று கூறினார்.
முன்னதாக, இந்தியா - நியூஸிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஏற்கெனவே தொடர் 1-1 என்று சமநிலையில் இருந்ததால், இன்றைய போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கோலின் முன்ரோ 72 (40), டிம் செய்ஃபெர்ட் 43 (25) ரன்கள் குவித்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடித் தோற்றது. இந்திய அணியில் இளம் வீரர் விஜய் சங்கர் 43 (28), ரோகித் ஷர்மா 38 (32) ரன்கள் குவித்தனர். 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.