உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் (சிசிஐ) வலியுறுத்தியுள்ளது.
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ -முகமது அமைப்பு ஈடுட்டது. இதையடுத்து அந்த நாட்டுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா விளையாடக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கமான கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவின் (சிசிஐ) அலுவலகம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இருக்கிறது. இங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான்கானை கவுரவிக்கும் வகையில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. இதே போல் சக வீரர்களுடன் இம்ரான்கான் இருக்கும் குரூப் போட்டோவும் தொங்கவிடப்பட்டு இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிளப் நிர்வாகிகளின் முடிவின்படி இவ்விரு புகைப்படங்களும் இப்போது அகற்றப்பட்டுள்ளது.
அந்த கிளப்பின் செயலாளர் சுரேஷ் பாப்னா கூறும்போது, ‘பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது. புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதில் சொல்ல வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கண்ணா (பொறுப்பு), அதன் நிர்வாக கமிட்டிக்கு எழுதிய கடிதத்தில், ‘காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் குறைந்தது ரூ.5 கோடியை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.