சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து விராட் கோலி, தோனி இருவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியும் இந்தப் போட்டியில் மோதின. முதல் போட்டி என்பதால் ஐபிஎல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தது. குறிப்பாக, விராட் கோலி, தோனி ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாகவே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போட்டி போட்டி மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர்.
இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி, ‘போரடிக்குதப்பா..’ என்று சொல்லும் அளவிற்கு அமைந்ததுதான் பரிதாபம். கிட்டதட்ட போட்டி நடைபெற்ற 3 மணி நேரமும் மிகுவும் மந்தமாகவே போட்டி சென்று கொண்டிருந்தது. பெங்களூர் அணி வீரர்கள் 17.1 ஓவர்களில் 70 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்கள். அந்த 70 ரன் இலக்கையும், சென்னை அணி 17.4 ஓவர்களில் தான் அடித்தது. டிவியில் பார்த்த ரசிகர்களுக்கே போர் அடித்தது என்றால் மைதானத்தில் பார்த்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். சென்னை அணி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி என்ன வென்றால், அவர்களின் அணி வெற்றி பெற்றது. ஆனால், பெங்களூரு அணி ரசிகர்களின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. தொடர்ச்சியாக மற்றொரு தோல்வி.
ஆடுகளத்தில் பந்து அதிகம் எழும்பாமல் இருந்ததும், பந்து எதிர்பார்க்காத அளவிற்கு ஸ்விங் ஆனதும் தான் விக்கெட் அடுத்தடுத்து வீழ்ந்ததற்கு பேட்டிங் செய்ய முடியாமல் போனதற்கு காரணம். ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், சாஹல், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி என அனைத்து சுழற்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர்.
போட்டி முடிந்த பின்னர் ஆடுகளம் குறித்து தோனி கூறுகையில், “ஆடுகள் மிகவும் மந்தமாக இருந்தது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. 2011 ஐபில் தொடரை நாங்கள் வென்ற பிறகு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகளை இது எனக்கு நினைவூட்டுகிறது. பனி இருந்தாலும் கூட விக்கெட்கள் விழாமல் இருப்பது முக்கியம்.140-150 ரன்கள் என்பது சரியானதாக இருக்கும் என்று நினைத்தோம். எந்த அணியாக இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும்.
80, 90, 100 என்பது மிகவும் குறைவான ஸ்கோர்தான். எந்தவொரு ஜீனியஸ் பந்துவீச்சாளர்களும் இதில் சிறப்பாக விளையாட பந்துவீச முடியும். மற்ற அணியிலும் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
விராட் கோலி கூறுகையில், “ஒரு தொடரினை இப்படி தொடங்க வேண்டும் என்று யாரும் விரும்பமாட்டார்கள். இருப்பினும், எதிரணியின் பேட்டிங்கை 18வது ஓவர் வரை கொண்டு சென்றது சிறப்பானது. பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இதுபோன்ற ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிது இல்லை. 140-50 நல்ல ஸ்கோராக இருக்கும் என நினைத்தேன். குறிப்பாக பிற்பகுதியில் பனிப்பொழிவு இருக்கும். 110-20 கூட போராடக்கூடிய ஸ்கோராக இருந்திருக்கும்” என்றார்.