ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளனர்.
ஐபிஎல் தொடர் நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து கொல்கத்தாவில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பலம் வாய்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதவுள்ளனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா அணியை பொருத்தவரை தமிழ்நாட்டு வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாகவுள்ளார். அத்துடன் அந்த அணியில் மேற்கிந்திய தீவுகள் வீரர்களான சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல் மற்றும் கார்லோஸ் பரத்வேட் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் நரேன், பியூஸ் சாவ்லா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய அனுபவ சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆண்ட்ரே ரசல் அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பொருத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் தடையிலுள்ள டேவிட் வார்னர் இப்போட்டியில் களமிறங்கவுள்ளார். அதனால் அவரது மீது அதிக கவனம் திரும்பியுள்ளது. எனினும் ஐதரபாத் அணியின் பலம் பந்துவீச்சேயாகும். ஏனென்றால் இந்த அணியில் அனுபவ பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், ரஷித் கான் உள்ளனர். அத்துடன் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் காயமடைந்துள்ளதால் இந்தப் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்றே தெரிகிறது. அதனால் டேவிட் வார்னர் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜானி பாரிஸ்டோ ஆகியோரின் ஆட்டத்தை நம்பியே உள்ளது. மேலும் இந்த அணியிலுள்ள தமிழ்நாட்டு வீரரான விஜய் சங்கர் களமிறங்கவுள்ளார். அவரின் சமீபத்திய ஃபார்ம் சிறப்பாகவுள்ளது அது ஹைதராபாத் அணிக்கு பலமாக இருக்கும்.
இதுவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் கொல்கத்தா அணியும் 15 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் 6 போட்டிகளில் ஐதரபாத் அணியும், 9 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வென்றுள்ளனர். அத்துடன் கொல்கத்தா மைதானத்தில் இவர்கள் 7 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் கொல்கத்தா அணி 5 முறையும், ஐதராபாத் அணி 2 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.