சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 161 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலி 9 (8) ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதேசமயம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பார்திவ் படேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
படேலும், டி வில்லியர்ஸும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும்போது, 25 (19) ரன்களில் வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா. அதைத்தொடர்ந்து வந்த அக்ஷ்தீப் நாத் 24 (20) ரன்கள் எடுத்து, அவரும் ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். நிலைத்து விளையாடிய பார்திவ் அரை சதம் அடித்து, 53 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இறுதி நேரத்தில் களமிறங்கிய மொயின் அலி 16 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். சென்னையில் பிரவோ, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. 7 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை சென்னை பறிகொடுத்துள்ளது. முதல் ஓவரிலேயே ஸ்டெயின் 2 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டியுள்ளார்.