சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியை சென்னை ரசிகர்கள் மட்டுமல்ல, விராட் கோலியும், பெங்களூர் அணி ரசிகர்களும் கூட மறக்கமாட்டார்கள். ‘வெற்றிகரமான தோல்வின்னா என்னவென்று’ புரிந்து கொள்வதற்கு இந்தப் போட்டி மிகச்சரியான உதாரணமாக இருக்கும். 40 ரன்களை எட்டுவதற்குள் 4 விக்கெட் இழந்துவிட்ட அணியை, கடைசி பந்துவரை கொண்டு செல்ல தோனியால் மட்டுமே முடியும்.
கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 26 ரன்கள் தேவை. இப்படியான ஒரு தருணத்தில் வெற்றி பெறுவது என்பது மிக மிக கடினம். அதாவது மூன்று சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் அடித்தால்தான் வெற்றி பெற முடியும். பவுண்டரி, சிக்ஸர், சிக்ஸர், இரண்டு ரன், சிக்ஸர் என 5 பந்துகளில் மைதானத்தையே அதகளப்படுத்திவிட்டார் தோனி. ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். ஆனால், கடைசி பந்தில் ரன் அடிக்கப்படாததால் பெங்களூர் வெற்றிபெற்றுவிட்டது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது என்னவோ பெங்களூர் அணிதான். ஆனால் அதிகம் கொண்டாடப்பட்டது தோனி. சிஎஸ்கே தோல்வி அடைந்ததையும் தாண்டி பலரும் தோனியை கொண்டாடினார்கள். சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறந்தன. போராட்டத்திற்கு சிறந்த உதாரணமாக தோனியை குறிப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோல், பெங்களூர் அணியுடன் ஒப்பிட்டும் பலரும் மீம்ஸ் பதிவிட்டிருந்தனர்.
நேற்றைய போட்டியின் போது எடுக்கப்பட்ட சிறுமி ஒருவரின் படம் அதிக அளவில் வைரல் ஆனது. மைதானத்தில் ஒரு பலகையின் அருகில் மிகவும் சோகமான முகத்துடன் அந்த சிறுமி இருக்கிறார். அந்த பதாகையில், ‘விராட் கோலியை இந்தப் போட்டியில் வெற்றிபெற விட்டுவிடுங்கள் தோனி’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்கு தகுந்தாற்போன்று அந்த சிறுமியின் முகபாவமும் இருந்தது.
அதேபோல், பல விஷயங்களை குறிப்பிட்டும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். கடைசி நேரத்தில் தாக்கூருக்கு பதில் இம்ரான் தாஹிரை இறக்கி இருந்தால் நிச்சயம் சரியாக ஓடி அந்த ரன் அவுட்டை தவிர்த்து இருப்பார் என்று பலர் குறிப்பிட்டிருந்தனர். ஏனெனில் இம்ரான் விக்கெட் எடுத்ததும் ஓடியே மைதானத்தில் வலம் வந்துவிடுவார்.
சிலர், அஸ்வின் செய்த மான்கட் விக்கெட்டும் பெங்களூர் அணி வெற்றி பெற காரணம் என்று சிலர் குறிப்பிட்டிருந்தனர். கடைசி பந்தில் உமேஷ் வீசிய பந்து அவர் கையில் இருந்து வெளியேறும் வரை தாக்கூர் கிரீஸில்தான் இருந்தார். கொஞ்சம் முன்கூட்டியே ஓடி இருந்தால் ரன் அவுட்டை தவிர்த்து இருக்கலாம், வெறும் 12 செ.மீ இடைவெளியில்தான் ரன் அவுட் செய்யப்பட்டது.
தோனி ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய அதிகபட்சமான ஸ்கோராக 84-ஐ பதிவு செய்தார். அதேபோல், முதல் இந்திய வீரராக ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை தாண்டியுள்ளார். நேற்று 7 சிக்ஸர்கள் அடித்தன் மூலம் மொத்தமாக அவர் 203 சிக்ஸர்கள் ஐபிஎல் போட்டிகளில் அடித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் தோனி அடித்த பந்து ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்றது. இது 111 மீட்டர் தூரம். இந்த ஐபிஎல் தொடரில் இதுதான் அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸர். மேலும், பேட்டிங்கை பொறுத்தவரை 104.66 ரன் சராசரியுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். 7 போட்டிகளில் விளையாடி தோனி 314 ரன்கள் எடுத்துள்ளார்.