உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியையே சந்திக்காமல் 7வது முறை வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் 3 விக்கெட் சாய்த்தார்.
இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. அந்த அணியில் இமாம் உல் ஹாக், ஃபகர் ஜமான் களமிறங்கினர். இமாம் 7 ரன்னில் விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால், அவரது ஓவரில் மீதமிருந்த இரண்டு பந்துகளை வீச விஜய் அழைக்கப்பட்டார்.
அவர் வீசிய முதல் பந்திலே அந்த விக்கெட்டை எடுத்தார். இதனையடுத்து, ஃபகர் ஜமான், பாபர் அசாம் ஜோடி நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தது. இவர்கள் விக்கெட் விளாமல் பார்த்துக் கொண்டனர். ஃபகர் 59 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 21.4 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இதனால், பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி செல்வதாக தோன்றியது.
பின்னர், குல்தீவ் யாதவ் தான் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் எடுத்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதேபோல், ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து இரண்டு விக்கெட் எடுத்து அசத்தினார். 117 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே விட்டுகொடுத்து வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான், 129 ரன்னிற்குள் 5 விக்கெட்டை இழந்தது. அசாம் 48, ஜமான் 62, முகமது ஹபீஸ் 9, சோயிப் மாலிக் (0) என அடுத்தடுத்து 4 விக்கெட் வீழந்தது. பின்னர், கேப்டன் சர்பராஸ் அகமதும் 12 ரன்னில் விஜய் சங்கரிடம் வீழ்ந்தார்.
பாகிஸ்தான் அணி 35 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டி மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அரைமணி நேரத்திற்கு பிறகு மீண்டு போட்டி தொடங்கியது. பின்னர் டக்வெர்த் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, 40 ஓவர்களில் 302 ரன்கள் எடுக்க வேண்டும்.
மீண்டும் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், இமாத் அசாம் அதிரடியாக விளையாடினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. வாஸிம் 39 பந்துகளில் 46 ரன்னுடனும், சதப் கான் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக 7வது முறை பாகிஸ்தானை வீழ்த்தியது. பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை போட்டிகளில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற சாதனையையும் தக்க வைத்துள்ளது. 140 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.