இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து நெட்டிசன்கள் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரவிசாஸ்திரி மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது அவ்வளவு அதிர்ச்சிகரமான செய்தி இல்லைதான். ஏனெனில், விராட் கோலியே ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக வரவேண்டும் என தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. இதனைவிட வேறு அறிகுறி என்ன வேண்டும்.
ஆனால் ரவிசாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ‘எதுக்கு இப்படி விண்ணப்பங்கள் பெற்று, தேர்வுக்குழு அவர்களை நேர்காணல் செய்து ஒருவரை அறிவிப்பது போல் ஒரு நாடகத்தை நடத்த வேண்டும்’ என நெட்டிசன்கள் சிலர் கேள்விகளை முன் வைக்கிறார்கள்.
ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெற்றி பெறவில்லை. அதனால், இந்திய அணி அடுத்த டி20 கோப்பை, உலகக் கோப்பையை இழந்துவிட்டது என சில நெட்டிசன்கள் இப்பொழுதே ஆரூடம் கூறுகிறார்கள். அடுத்த உலகக் கோப்பையில் இனி கவனம் செலுத்துவோம், இரண்டு வருடங்களை மறந்துவிடலாம் எனவும் அவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே சிக்கல் நிலவுவதற்கும் ரவிசாஸ்திரிதான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. ரவிசாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், கோலி-ரோகித் இடையிலான சிக்கலும் தொடரும் என்றே கூறப்படுகிறது.
ரவிசாஸ்திரி தலைமையில் இந்திய அணி மிகவும் வலிமையாக உள்ளது என்பது எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், சில முக்கியமான பிரச்னைகள் களையப்படாமல் இருப்பதுதான் இத்தகைய விமர்சனங்களுக்கு காரணமாக உள்ளது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பிரச்னைகளில் உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில் கோட்டை விட்டது, தோனி எத்தனையாவது இடத்தில் களமிறங்குவது என்பன குறித்த சர்ச்சைகள் முக்கியமானவை.
Cricket Advisory Committee member @therealkapildev says the decision to reappoint @RaviShastriOfc as #TeamIndia's Head Coach was unanimous. pic.twitter.com/3CXL0BF7nJ
— BCCI (@BCCI) August 16, 2019