இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் விலகுகிறார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியின் 4வது நாள் ஆட்டத்தின் போது, ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் தலையில் அடித்தது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதுபோல் இருந்தது.
அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யும்போது ஸ்மித் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மார்னஸ் லபஸ்சாக்னி பேட்டிங் செய்தார். ஒரு வீரர் தலையில் அடிபட்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதில் மற்றொரு வீரரை விளையாட வைக்கலாம் என அண்மையில் ஐசிசி கொண்டு வந்த புதிய விதியின் படி இது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஸ்மித் ஓய்வில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நாளை மறுநாள் தொடங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் பங்கேற்கமாட்டார் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாஞ்செர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஸ்மித் தலையில் அடித்த பந்தால், அவரது மூளையில் அதிர்வு ஏற்பட்டுள்ளது என்றும், அதையும் மீறி அவர் விளையாடினால் விபரீதமாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்மித் 144 மற்றும் 142 ரன்களும், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்களும் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.