ரவிச்சந்திரன் அஸ்வினை ஆடும் லெவனில் சேர்க்காதது ஏன் என்பதற்கு இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் அனுபவ வீரர் அஸ்வின், ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளனர்.
அஸ்வின், ஆடும் லெவனில் இடம்பெறாததற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால் கடந்த முறை வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடரில், தொடர் நாயகன் விருது பெற்றவர் அஸ்வின். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் கலக்கினார். இந்நிலையில் அஸ்வின் சேர்க்கப்படாதது ஆச்சரியமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆடும் லெவனில் அவர் சேர்க்கப்படாதது ஏன் என்பது பற்றி, துணை கேப்டன் ரஹானே கூறும்போது, ‘’ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற வீரர்கள் ஆடும் லெவனில் இல்லாமல் இருப்பது கஷ்டமானதுதான். ஆனால், அணி நிர்வாகம் எப்போதும் சரியாக யோசித்தே சிறந்த காம்பினேஷனை தேர்வு செய்யும். அதனால் இந்த பிட்சின் தன்மைக்கு ஜடேஜா சிறப்பாக பந்துவீசுவார் என்று நம்பியதால் அஸ்வினுக்குப் பதில் அவரை தேர்வு செய்திருக்கிறார்கள். அதோடு ஆறாவது பேட்ஸ்மேன் ஒருவர் தேவைப்படுவதால், பேட்டிங் மற்றும் பந்துவீசும் விஹாரியை தேர்வு செய்திருக்கிறார்கள். பயிற்சியாளர் மற்றும் கேப்டனும் இணைந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.