ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி, 2-க்கு 1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி, ஒல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நேற்றுமுன் தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. ஜாஸ் பட்லர் 64 ரன்களுடனும் லீச் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டத்தை நேற்று தொடர்ந்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில், மார்ஷ் 5 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியை மிரட்டினார், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர். அவரது வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாத அந்த அணி, 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் (5 ரன்கள்), ஹாரிஸ் (3), லபுஸ்சாக்னே (48), மார்ஷ் (17), சிடில் (18), லியான் (25) ஆகியோ ரின் விக்கெட்டுகளை ஜோஃப்ரா ஆர்ச்சர் வீழ்த்தினார். இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் ஆபத்பாந்தவன் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே கடுமையாக போராடினார். அவர் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில் லை.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 9 ரன்கள் சேர்த்துள்ளது. பர்ன்ஸ் 4 ரன்னுடனும் டென்லி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடர்கிறது.