பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில், இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் குவைத் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் யுஏஇ ஆகிய அணிகள் பி பிரிவிலும் விளையாடின. இதில், விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, பங்களாதேஷ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று கொழும்பு நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. இந்திய அணி 32.4 ஓவரில் வெறும் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. அதில், கரன் லால் 37, ஜுரெல் 33 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து, 107 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இருப்பினும், வெற்றி இலக்கு குறைவு என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு இருந்து கொண்டே இருந்தது. இறுதியில், பங்களாதேஷ் அணி 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி ஆசியக் கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் சுழற்பந்துவீச்சாளர் அங்கோலெகர் 5 விக்கெட் சாய்த்து அசத்தினார்.
Defending Champions India U19 hold their nerve and seal a thrilling 5 run win over Bangladesh in U19 Asia Cup final. We are proud of you boys! ✌✌ pic.twitter.com/Lo6j32Cfte
— BCCI (@BCCI) September 14, 2019