தென்னாப்பிரிக்க அணியுடனான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது டி-20 போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது.
கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி-20 தொடரில், இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களே இந்த தொடரிலும் நீடிக்கிறார்கள். வலுவான இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மணிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். சுழற்பந்து வீச்சாளர்களில் ஜடேஜா அல்லது ராகுல் சாஹர், குணால் பாண்ட்யா, வாஷங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறுவார்கள். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியுள்ளது பலம் சேர்க்கும். வேகப்பந்துவீச்சாளர்கள், பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் களமிறங்குகின்றனர்.
தென்னாப்பிரிக்க அணி, புதிய கேப்டன் குயின்டான் டி காக் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணியின் டேவிட் மில்லர், வான்டெர் டூஸன் ஆகியோர் அதிரடியில் மிரட்டுவார்கள். பந்துவீச்சில் ரபாடா, பெலக்வாயோ, ஜூனியர் டாலா அச்சுறுத்தக் கூடியவர்கள். தொடர்ச்சியாக நான்கு டி20 தொடர்களை கைப்பற்றியுள்ள தென்னாப்பிரிக்க அணி, அதே உற்சாகத்தோடு களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.
இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை டி-20 போட்டியில் 13 முறை மோதியுள்ளன. இதில் 8-ல் இந்தியாவும், 5-ல் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்றுள்ளன.
தர்மசாலாவில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.