உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் வடகொரியாவுக்கு எதிரான ஆட்டம், போரில் பங்கேற்றதைப் போல் இருந்ததாக தென் கொரியா அணியினர் தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையேயான பிரச்னை காலம் காலமாக தொடர்கிறது. அது கால்பந்து களத்திலும் எதிரொலித்தது. இரு நாட்டு அணிகளும் கால்பந்து களத்தில் நேருக்கு நேர் சந்தித்தன. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் குரூப் எச் பிரிவில் இடம்பிடித்துள்ள இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியின் போது மைதானத்தில் அமைதியே நிலவியது. காரணம். 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. எந்த தொலைக்காட்சியிலும் போட்டியை நேரலை செய்யவும் வடகொரியா அனுமதிக்கவில்லை.
கால்பந்து களத்தில் உள்ள வீரர்கள் மற்றும் போட்டியை நடத்தும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்ற இந்த கால்பந்து போட்டி, கோல்களின்றி டிரா ஆனது. போட்டியில் பங்கேற்ற பின்னர் சியோல் திரும்பிய தென்கொரிய அணி வீரர்கள், காலி மைதானத்தில் நடைபெற்ற வடகொரிய அணியுடனான ஆட்டம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். அந்நாட்டு வீரர்கள் போர் தொடுப்பதைப் போல் ஆக்ரோஷமாக விளையாடியதாகவும், காயங்கள் ஏதுமின்ற தங்கள் அணியினர் திரும்பி வந்ததே மிகப்பெரிய சாதனையாக இருந்ததாகவும் தென்கொரிய அணி வீரர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த போட்டியின் வீடியோப்பதிவை வடகொரியா வெளியிட்ட போதிலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடிய வகையில் வீடியோ தரமாக இல்லாததால் தென்கொரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த வீடியோவை நிராகரித்துவிட்டன.
இதனிடையே, காலியான கேலரியுடன் உள்ள மைதானத்தில் விளையாட வேண்டும் என்பதை வடகொரியா முன் கூட்டியே தெரிவிக்காதது குறித்தும், பத்திரிகையாளர்களையும் போட்டியை காண அனுமதிக்காதது குறித்தும் தென்கொரிய அணி வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA-விடம் புகார் அளிக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்