தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் அரை சதம் கடந்தார். அவருக்கு துணையாக ஆடிவரும் ரஹானே 43 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இதனையடுத்து தொடக்கத்தில் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி இப்போது சரிவிலிருந்து மீண்டுள்ளது.
ராஞ்சியில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது, வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார், இதன் பின்பு களமிறங்கிய புஜாரா டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதற்கடுத்து ஆட வந்த கேப்டன் விராட் கோலி 12 ரன்களில் பெவிலியின் திரும்பினார். தென்னாப்பிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர் ரபாடா 2 விக்கெட்டையும், நார்ட்ஜே 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இப்போது, ரோகித் சர்மாவும், ரஹானேவும் களத்தில் இருக்கின்றனர். இந்திய அணியின் ஸ்கோர் 118 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.