விசா காலம் முடிந்த பின்னும் தங்கியிருந்ததால் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சைஃப் ஹசன். இவர் சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்தார். கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய பிறகு, அந்த அணியில் ஒரு பகுதியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். சைஃப் ஹசன் உள்ளிட்ட சிலருக்குத் திங்கட்கிழமை காலை விமான டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி கொல்கத்தா விமான நிலையத்துக்கு திங்கட்கிழமை சென்ற அவரது பாஸ்போர்ட்டை, குடியேற்ற அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அவரது விசா, முந்தையை நாளே முடிவடைந்திருந்தது தெரிய வந்தது. அதாவது அவருக்கு இந்திய விசா, கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டது. அந்த 6 மாத விசா ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்திருந்தது.
இதையடுத்து அவரை குடியேற்ற அதிகாரிகள் விமானத்துக்குச் செல்ல அனுமதி மறுத்தனர். இதுபற்றி பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துக்கு அவர் புகார் செய்தார். பின்னர், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் அவருக்கு புதிய விசாவை நேற்று வழங்கியது.
விசா காலம் முடிந்தும் தங்கியதால், அவருக்கு ரூ.21,600 அபராதமாக விதிக்கப்பட்டது. அதைக் கட்டிய பின், அவர் நேற்று மாலை டாக்காவுக்கு அனுப்பப்பட்டார்.