‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், அஜித்தின் கெட்அப் ரசிகர்களை கவரச் செய்துள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்துள்ள இந்தப் படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.
படத்தில் அஜித்துடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’கில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகை வித்யாபாலன் வித்தியாசமான வேடத்தில் அஜித்துடன் இணைந்திருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துருக்கிறார்.
இந்நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் வெளியாகிய உடனே அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படையெடுத்தனர். ட்விட்டரில் ‘நேர்கொண்ட பார்வையை’ உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர். இதனால் சமூக வலைத்தளங்களை திறந்தால் பெரும்பாலும் ‘நேர்கொண்ட பார்வை’யாகவே இருந்தது.
அறிவித்ததைப் போலவே 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியானது. அதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனார். ட்ரெய்லர், ‘நீங்க கற்புடன் இருக்கிறீர்களா?’ என்ற அஜித்தின் முதல் வசனத்துடன் தொடங்குகிறது. மேலும் நீதிமன்ற காட்சியில் அஜித் வாதாடும் காட்சிகள் ரகளையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆக்ஷன் ஆங்கிளில் அஜித் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது ட்ரெய்லர்.