சுவாமி சங்கரதாஸ் அணியினர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டதாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து பாக்யராஜ் போட்டியிடுகிறார். இதற்கு சுவாமி சங்கரதாஸ் அணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணி சார்பில் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவும் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோருடன், துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை குஷ்பு, கோவை சரளா, நடிகர் பிரசன்னா, பசுபதி, ரமணா, நந்தா, சோனியா போஸ், மனோபாலா, பிரேம்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து பாக்யராஜ் அணியினர் ஆதரவு திரட்டினர். இது குறித்து விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சாலிக்கிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து, ஆதரவு கோரினர்” என்று குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் அதற்கான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.