‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பிற்கான இடங்களை தேர்வு செய்வதற்காக இயக்குநர் மிஷ்கின் லண்டன் சென்றுள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. ஆக்ஷன் மற்றும் புலனாய்வுக் கதை பாணியில் உருவான இப்படத்திற்கு நல்லவிதமான விமர்சனங்கள் கிடைத்தன. இதில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா ஜெரெமையா, வினய், பாக்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சிம்ரன் கெளரவத்தோற்றத்தில் நடித்தார். விஷாலின் கணியன் பூங்குன்றனார் கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது. இதற்கு அரோல் கொரேலி இசையமைத்திருந்தார். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ‘துப்பறிவாளன்’ இரண்டாம் பாகத்தை எடுக்க இந்தப் படக்குழு முடிவெடுத்தது. சில நாட்கள் முன்பு இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் இரண்டாம் பாக படப்பிடிப்புகான லண்டன் சென்றுள்ளார். அங்கே மொத்தம் 45 நாட்கள் தங்கி ஷெர்லாக் அருங்காட்சியகத்தில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தக் கதைக்களம் முழுக்க வெளிநாட்டில் நடக்கும் விதமாக அமைய உள்ளது என்றும் பேச்சு அடிப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘சைக்கோ’ என்ற படத்தை மிஷ்கின் இயக்கி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.