நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்று ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கின்றேன் என நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடிகர் விஜய் நடித்த பிகில் படம் வெற்றிப் பெற்றதையொட்டி, ரசிகர்கள் சார்பில் மாணவிகளுக்கு பரிசு, விளையாட்டு உபகரணங்களையும், திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பேனர் வைத்ததால், ஒரு பெண்ணின் இறப்பிற்கு நாம் அனைவரும் காரணம் ஆகி விட்டோம். இதுபோன்று இனி நிகழக் கூடாது என்பதற்காக நடிகர் விஜய் தனது படங்களுக்கு பேனர் வைக்காமல் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும், மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்க ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா, இந்திராகாந்தி, வேலு நாச்சியார் போன்று பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். பெண்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கக் கூடாது. தற்போது பெண்கள் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, “நான் அரசியலில் தான் உள்ளேன். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் தான் எம்ஜிஆர். எம்ஜிஆர் பாடிவிட்டும், நாட்டை ஆட்சி செய்து விட்டும் சென்றுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை யாரும் எதிர்க்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.