அருண் விஜயுடன் இணைந்து தனது பிறந்தநாளை நடிகை ரெஜினா கொண்டாடி உள்ளார்.
‘குற்றம்23’ படத்திற்குப் பிறகு இயக்குநர் அறிவழகனுடன் மீண்டும் நடிகர் அருண் விஜய் இணையும் திரைப் படம் ‘ஏவி31’. இது ஒரு த்ரில்லர் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான படப்பிடிப்பு கடந்த 9 ஆம்தேதி பூஜையுடன் தொடங்கியது. அதனை அடுத்து படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகிறார். தெலுங்குப் படங்கள் பக்கம் அதிகமாக கவனம் செலுத்த தொடங்கிய பிற்பாடு ரெஜினா தமிழில் நடிப்பது குறைந்துபோய் விட்டது.
இந்நிலையில் தனது பிறந்தநாளை ரெஜினா, அருண் விஜய் மற்றும் ‘ஏவி31’ படக்குழுவினருடன் இணைந்து படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடி உள்ளார். இதற்கான படங்களை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அதில், ‘முன்கூட்டியே ரெஜினாவின் பிறந்தநாளை ‘ஏவி31 படப்பிடிப்பின்போது கொண்டாடினோம்’ என குறிப்பிட்டுள்ளது.
‘ஈரம்’, ‘ஆறாது சினம்’ மற்றும் ‘குற்றம்23’ ஆகிய படங்களை இதற்கு முன் இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ளார். மூன்றுமே த்ரில்லர் நிறைந்த கதையம்சங்களை கொண்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும் த்ரில்லர் கதையை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கதையின் பெரும்பகுதி டெல்லியில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.